Home நாடு துன் மகாதீர் குடும்பத்தினருடன் உரையாடினார்

துன் மகாதீர் குடும்பத்தினருடன் உரையாடினார்

1098
0
SHARE
Ad
துன் மகாதீர் கோப்புப் படம்

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை ஜனவரி 22 முதல் ஐஜேஎன் என்னும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குணமடைந்து வருகிறார் என்றும் குடும்பத்தினருடன் உரையாடினார் என்றும் அவரின் மகள் மரீனா மகாதீர் தெரிவித்தார்.

எனினும் மகாதீருக்குத் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனிக்கிழமை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மருத்துவமனைக்கு வந்து மகாதீரின் துணைவியார் சித்தி ஹாஸ்மாவை நேரில் சந்தித்து மகாதீரின் நலம் குறித்து விசாரித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னரின் துணைவியார் ராஜா பெர்மாய்சுரி அகோங் மருத்துவமனைக்கு வந்து மகாதீரின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

மகாதீர் தேசிய இருதய மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் பரவியது முதல் உள்நாட்டு, அயல் நாட்டு ஊடகவியலாளர்கள் ஐஜேஎன் முன்பாகக் குவிந்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களிலும் பரபரப்பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமும், நஜிப் துன் ரசாக்கும் மகாதீர் நலமடைய வேண்டுமெனத் தங்களின் பிரார்த்தனைகளைத் தங்களின் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் மகாதீரின் உடல் நலம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான ஆரூடங்களைப் பரப்ப வேண்டாம் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் அனுவார் மூசா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைகளையும், குடும்பத்தினர் விடுக்கும் அறிக்கைகளையும் மட்டுமே பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு பகிர வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.