Home நாடு மாரா மீது நம்பிக்கை மோசடி புகார்கள் எழவில்லை – மலேசியக் காவல் துறை அறிவிப்பு!

மாரா மீது நம்பிக்கை மோசடி புகார்கள் எழவில்லை – மலேசியக் காவல் துறை அறிவிப்பு!

879
0
SHARE
Ad

mara-maccகோலாலம்பூர், ஜூன் 29 – மாரா பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகள், மெல்பெர்ன் நகரில் சொத்து வாங்கியதில் மோசடி செய்ததாகச் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாரா மீது தற்போது வரை நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றவியல் புகார்கள் எதுவும் எழவில்லை என மலேசியக் காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்துத் தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “மாரா தொடர்பான வழக்கில் வழக்கு விசாரணை முழுவதையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமே கையாளும் என்பதை இங்கு நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடாமல் இருப்பதற்குக் காரணம், இதுவரை மாரா குறித்து நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றவியல் புகார்கள் எதுவும் எழவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாராவின் மெல்பெர்ன் மோசடி தொடர்பான சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, மெல்பெர்னில் செயல்பட்டு வரும் ‘தி ஏஜ்’ (The Age) பத்திரிக்கை தான்.

#TamilSchoolmychoice

மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 115 மலேசிய மாணவர்களுக்காக மாரா, மெல்பெர்னில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் வாங்கியது. இதில் பல மில்லியன் ரிங்கிட் மோசடி நடந்துள்ளதாக தி ஏஜ் குற்றம்சாட்டியது. மேலும், இந்த மோசடியில் மாராவின் முக்கிய அதிகாரிகள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் உண்மையான விலையை விட சில மில்லியன் ரிங்கிட் அதிகமாக அரசிற்குக் கணக்குக் காட்டியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.