
கோலாலம்பூர் – இணையத் தளங்களில் ஒரு சுவாரசியமான பழைய புகைப்படம் ஒன்று உலா வருகிறது.
2008-ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மூவர் கைதிகளுக்கான உடையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அமர்ந்திருக்கும் காட்சிதான் அது!
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அப்போது பாஸ் கட்சியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த முகமட் சாபு, சுல்கிப்ளி அகமட் ஆகியோர்தான் அந்த மூவர்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த மூவரில் இருவர் தங்களின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று புதிய பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
முகமட் சாபு, கால ஓட்டத்தில் அமானா நெகாரா கட்சியின் தலைவராக உருவெடுத்து, 14-வது பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் வெற்றி பெற்று இன்றைக்கு தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுல்கிப்ளி அகமட் அமானா நெகாரா கட்சியின் சார்பில் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சுகாதார அமைச்சராகியிருக்கிறார்.
தியான் சுவாவுக்கு காலம் கடந்து விடவில்லை. பத்து தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்டு வென்றிருந்தால் அவரும் இன்று அமைச்சராகியிருப்பார் என்பது பலரது நம்பிக்கை.
அடுத்த கட்ட அமைச்சரவை நியமனங்கள் வரும்போது தியான் சுவா செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.