Home உலகம் பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனாக் மீண்டும் பிரதமராவாரா?

பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனாக் மீண்டும் பிரதமராவாரா?

128
0
SHARE
Ad
ரிஷி சுனாக்

இலண்டன் : பிரிட்டிஷ் வாக்காளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) நாட்டின் முக்கியமான பொதுத் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை நோக்கி  செல்கின்றனர். கடந்த 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியின் மீதான ஒரு பொது வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

பிரதமர் ரிஷி சுனாக்கின் தவணைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்த திடீர் தேர்தல் நடத்தப்படுகிறது. இது அவரது கட்சியில் பெரும்பாலானோரை ஆச்சரியப்படுத்தியது.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) 2019-இல் நடைபெற்ற கடந்த பொதுத் தேர்தலில் 1935-க்குப் பிறகான மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ் தற்போது மீண்டும் அந்தக் கட்சி புத்துருவாக்கம் கொண்டுள்ளது.

கீர் ஸ்டாமர்
#TamilSchoolmychoice

இன்றைய வாக்கெடுப்பு ஆறு வார கால பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடைபெறுகிறது. பிரச்சார விவாதங்களின் பெரும்பகுதி பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு, பிரிட்டனின் பொதுச் சேவைகளின் நிலை, வரி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றை மையப்படுத்தியே அமைந்திருந்தது.

2020ஆம் ஆண்டில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி விட்டதால் அந்த விவகாரம் இந்த முறை பிரச்சாரங்களில் அதிக அளவில் இடம் பெறவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை எடுத்தனர்.

2019-இல் நடந்த பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் பெரும் வெற்றி பெற்றதிலிருந்து இதுவரையில் பிரிட்டனுக்கு மூன்று கன்சர்வேடிவ் பிரதமர்கள் தொடர்ந்து வாய்த்தனர்.

ஜான்சனுக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் 2022ஆம் ஆண்டில் அவருக்குப் பதிலாக லிஸ் ட்ரஸ் என்ற பெண்மணியைத் தேர்ந்தெடுத்தனர். அவர் பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமரானார். பின்னர் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்குப் பதிலாக ரிஷி சுனாக்கை தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்வின் மூலம் பிரிட்டனின் முதல் பிரிட்டிஷ் அல்லாத பிரதமராக சுனாக் வரலாறு படைத்தார்.

சுனாக், தொழிலாளர் கட்சியின் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையிலான போட்டியாக இன்றைய தேர்தல் பார்க்கப்படுகிறது.

தேர்தலில் வாக்களிக்க சுமார் 46.5 மில்லியன் பிரிட்டிஷ் குடிமக்கள் தகுதி பெற்றுள்ளனர். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகளில் உள்ள 650 தனி தொகுதிகளில் அவர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கின்றனர். ஒரு கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை தனித்து அமைக்க 326 இடங்கள் தேவைப்படுகின்றன.

காலை தொடங்கி இரவு 10.00 மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்காளர்களைப் பாதிக்கக்கூடிய எதையும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை அதன் பின்னரே வெளியிட முடியும். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் இன்றிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை வெளியிடப்படும்.